டெபாசிட் வரம்பில் புதிய சலுகை! எஸ்.பி.ஐ வங்கி அறிவிப்பு

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் (எஸ்.பி.ஐ) சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் அதன் பிற வங்கிக் கிளைகளில் (non home branch) பணம் டெபாசிட் செய்வதற்கான உச்ச வரம்பு நீக்கப்பட்டுள்ளது.


எஸ்.பி.ஐ-யில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள், அவர்கள் சேமிப்பு கணக்கு வைத்துள்ள வங்கிக் கிளையை தவிர்த்து, அதன்பிற கிளைகளில் ரூ.25,000 மட்டும்தான் டெபாசிட் செய்ய முடியும் என்ற உச்சவரம்பு இருந்தது.

 தற்போது, அந்த உச்சவரம்பு முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது. 

இதன்படி, வாடிக்கையாளர்கள் எந்த உச்ச வரம்பின்றியும் அதிகளவில் பணத்தை டெபாசிட் செய்யலாம். 

இந்தப் பணப்பரிமாற்றத்துக்கு ரூ.50, பரிவர்த்தனை கட்டணமாகவும், கூடுதலாக ஜி.எஸ்.டி வரியும் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எஸ்.எம்.வி (SMV) கணக்குகளுக்கு டெபாசிட் வரம்பு ஒரு நாளைக்கு ரூ.2 லட்சமாக இருக்கிறது என்று வங்கி தெரிவித்துள்ளது. 

மேலும், எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்கள், வங்கிக் கணக்கு வைத்திருக்கும் கிளை மூலமாகவோ, ஆன்லைன் மூலமாகவோவிண்ணப்பித்து புதிய இ.எம்.வி சிப் பொருத்தப்பட்ட டெபிட் கார்டுகளைக் கட்டணம் இல்லாமல் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.