​விபத்தில் இறந்தவர் கணவர் என்று தெரியாமல் சிகிச்சை அளித்த செவிலியர்

ஓமலூர் அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டவர் தமது கணவர் என்று தெரியாமல் சிகிச்சை அளித்த செவிலியர், 

அவர் உயிரிழந்த பின்னர் விவரம் தெரிந்ததால் கதறி அழுத காட்சி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள மேச்சேரி பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் திமுக மாவட்ட பிரதிநிதியாக உள்ளார். 

இவரது மனைவி சிவகாமி இவர் ஓமலூர் அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகள் உள்ளார்.

இந்த நிலையில் இன்று காலை சிவகாமி ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு வேலைக்கு வந்து விட்ட நிலையில் மேச்சேரியில் இருந்து சேலம் செல்வதற்காக தனது மோட்டார் பைக்கில் சீனிவாசன் வந்து கொண்டிருந்தார், அப்போது ஓமலூர் அருகே உள்ள பச்சனம்பட்டி என்ற இடத்தில் போன் பேசுவதற்காக ரோட்டின் ஓரத்தில் இருசக்கர வாகனத்தை நிறுத்தி போன் போசிக்கொண்டிருந்தார் சீனிவாசன்.

அப்போது மேட்டூரில் இருந்து சேலம் சென்ற கார் அதிவேகமாக வந்தபோது ரோட்டின் ஓரத்தில் நின்றுகொண்டிருந்த சீனிவாசன் மீது மோதியது. 

இதில் அவர் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்தம் சொட்டிய நிலையில் அக்கம் பக்கத்தினர் மீட்டு ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

சீனிவாசனுக்கு டாக்டர்கள் மற்றும் செவிலியர் சிவகாமி சிகிச்சையளித்தனர். வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

அப்போது முகம் பகுதியில் அதிகமான ரத்தம் இருந்ததால் அடிப்பட்டவர் யார் என அடையாளம் தெரியவில்லை. 

மேலும் சிவகாமி முகத்தில் இருந்த ரத்தத்தை துடைத்து பார்த்த போது சிவகாமியின் கணவர் சீனிவாசன் என்பது தெரிந்து, தனது கணவன் இறந்ததை கண்டு செவிலியர் சிவகாமி கதறி அழுத காட்சி பார்ப்பவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.